இந்தியா

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார் ப.சிதம்பரம்: பாஜக குற்றச்சாட்டு

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ப.சிதம்பரம் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறிவிட்டார் என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21/ஆம் தேதி முன்னாள் நிதி‌ அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதனை அடுத்து திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சிபிஐ தொடர்ந்த முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்த சிதம்பரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் எம்.பி.கள் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட ப. சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ““பொருளாதார விவகாரங்களில் பாஜக ஒன்றன் பின் ஒன்றாக தவறு செய்தே வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை” எனப் பேசியிருந்தார். 

இந்நிலையில் அமைச்சராக இருந்த காலத்தில் எந்தவொரு தவறும் நடைபெறவில்லை என்று சிதம்பரம் பேசியிருப்பதாகவும், ஆனால் ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் சிதம்பரத்திற்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில்தான் வழக்கே உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதன் மூலம் ஜாமீன் நிபந்தனைகளை சிதம்பரம் மீறியிருப்பது தெளிவாவதாகவும் ஜவடேகர் கூறியுள்ளார். ப.சிதம்பரத்தை பிணையில் விடுவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்து கருத்து எதுவும் கூறக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.