இந்தியா

`மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை’- மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் மே, ஜூன் மாதங்களில் மின் தேவை 215 - 220 ஜிகா வாட் அதிகரிக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது. அப்படி மின் தேவை அதிகரிக்கையில், மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியிருப்பது, கவனம் ஈர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, “நாட்டின் மின்சாரத் தேவை கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. இந்த தேவை அதிகரிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகின்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய மின் தேவை 8.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்நிலை தொடர்கையில் மே, ஜூன் மாதங்களில் மின்சாரத் தேவை 215 - 220 ஜிகா வாட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மதியம் 2.15 மணியளவில் 201.066 ஜிகா வாட் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நாட்டில் தங்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க அரசு, பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது” எனக் கூறியுள்ளது