Geothermal well web
இந்தியா

பூமிக்குள்ளிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம்.. லடாக்கில் புவிவெப்பக் கிணறு!!

லடாக்கில் 14 ஆயிரம் அடி உயரத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் வெற்றிகரமாக புவிவெப்பக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 1 மெகாவாட் மின்நிலையம் மூலம் வணிக ரீதியான மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும்.

PT WEB

ஓஎன்ஜிசி நிறுவனம் லடாக்கில் தனது 2ஆவது புவிவெப்பக் கிணற்றை வெற்றிகரமாக தோண்டி முடித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் புவிவெப்பக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. புவிவெப்ப ஆற்றல் மூலம் 1 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையத்தை உருவாக்கி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு இக்கிணறு வழிவகுக்கும் என்று ஓஎன்ஜிசி கூறியுள்ளது.

Geothermal well

பூமியின் அடி ஆழத்திற்கு செல்லும்போது கிடைக்கும் ஜியோ தெர்மல் எனர்ஜி எனப்படும் புவி வெப்பத்தை கொண்டு மின்சாரம் உருவாக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. லடாக்கில் உள்ள புவிவெப்ப மண்டலம் இந்தியாவின் மிகச் சிறந்த புவிவெப்ப வளமாக பல ஆண்டுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இங்கிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் பல ஆண்டுகளாக மந்தமாக இருந்த நிலையில் தற்போது அது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியா 2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவம் அல்லாத பசுமை மின் உற்பத்தித் திறனை எட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சூரிய, காற்று மற்றும் நீர் மின்சாரத்தைத் தாண்டி தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பன்முகப்படுத்த முயன்று வருகிறது.