இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலுமே காங்கிரஸ் மற்று பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக போட்டியிடுகின்றன. தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 62 பேர் உட்பட 337 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தற்போதைய முதலமைச்சர் வீர்பத்ர சிங், அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள 10 பேர் , முன்னாள் முதலமைச்சர் பிரேம்குமார் தூமல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ள நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலில் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 6 பேர் பாரதிய ஜனதா சார்பிலும், 3 பேர் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் போட்டியிடுகின்றனர். தற்போது இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்எல்ஏக்களும், பாரதிய ஜனதாவுக்கு 28 எம்எல்ஏக்களும் உள்ளனர். இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்காக 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 லட்சத்து 25 ஆயிரத்து 941 வாக்காளர் உள்ளனர்.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.