சமீபத்தில், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவரான சன்சஞ் ராவத் , நரேந்திர மோடி வரும் செப்டம்பரில் 76 ஐ வயதில் அடியெடுத்து வைப்பதால் விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என்பது போன்ற கருத்தை பேசியிருந்தார். பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்பதால் இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சூழலில், உத்தர பிரதேச முதல்வர் பிடிஐ நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில், நரேந்திர மோடி பதவி விலக உள்ளதாகவும் அதன் பிறகு நீங்கள் (யோகி) பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள அவர்,
“ நான் மாநிலத்தின் முதல்வர். பாரதிய ஜனதா கட்சி மாநில மக்கள் நலன் கருதி பாஜக எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியது, அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. உண்மையில், நான் ஒரு யோகி.” என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியின் ஓய்வு குறித்தான கேள்வி கேட்டபோது,
” பாரதிய ஜனதா கட்சி அத்தகைய விதி எதுவும் இல்லை. மத்திய அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது அந்த 'வயது வரம்பை' தாண்டியவர். பீகார் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி 80 வயது ஆகிவிட்டதே” என்றார்.
” நான் ஒரு குடிமகனாக வேலை செய்கிறேனே தவிர என்னை சிறப்பு வாய்ந்தவனாகக் கருதுவதில்லை. ஒரு குடிமகனாக, எனது அரசியலமைப்பு பொறுப்புகளை நான் நிறைவேற்றுகிறேன். எனது தேசம் எல்லாவற்றிற்கும் மேலானது. என் நாடு பாதுகாப்பாக இருந்தால், என் 'தர்மமும்' பாதுகாப்பானது, 'தர்மம்' பாதுகாப்பாக இருந்தால், அது நலனுக்கு வழி வகுக்கும்.
சுயநலத்திற்காக மதம் பின்பற்றப்படும்போது, அது புதிய சவால்களை உருவாக்குகிறது. இருப்பினும், ஒருவர் தன்னை ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக அர்ப்பணிக்கும்போது, அது முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.”
சமீபத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, சாலைகளில் தொழுகை நடத்தினால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என, உத்தர பிரதேச போலீசார் அறிவித்திருந்தனர். இதுகுறித்து கேட்கப்பட்டபோது,
"உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலைகள் என்பது நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்காகவும் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்துக்களிடமிருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 66 கோடி பேர் பங்கேற்றனர். இதில் வன்முறை சம்பவமோ, பாலியல் துன்புறுத்தலோ எங்கும் நடைபெறவில்லை. இதுதான் மத ஒழுக்கம்.
அரசு சொத்துகளை அபகரிக்கும் ஊடகமாக வக்பு வாரியம் மாறிவிட்டது. எனவேதான் வக்பு திருத்த சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். அதேநேரம் இந்த புதிய சட்டத்தால் முஸ்லிம்களும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.