இந்தியா

ராகுல் காந்தி கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டும்: பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் வாழ்த்து

Sinekadhara

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விரைவில் குணமடைய பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. அதில் பொதுமக்களுடன் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட காரணத்தால் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் பாதுகாப்பு நெறிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் விரைவில் குணமடைந்து வர பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியின் உடல் ஆரோக்யத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்து கேள்விப்பட்டு கவலை கொள்கிறேன். விரைவில் முழுமையாக அவர் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரையும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

பாஜகவின் குஷ்பு சுந்தர், ‘’எதிர்க்கட்சியின் வலுவான குரலாக தொனிப்பவர் ராகுல்காந்தி. விரைவில் குணமடைய டன் கணக்கான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். உடல்நலனில் அக்கறை செலுத்தி விரைவில் குணமடையுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.