இந்தியா

இந்தியாவில் வேவுபார்க்கப்பட்ட 300 பேர்?-அதிர்ச்சித் தகவல்

jagadeesh

இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்ததும் இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவை என்பதும் தெரியவந்துள்ளதாக THE WIRE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் உள்ளன. இதில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரது எண்களும் அடக்கம்.

தமிழகத்தைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு சமூக ஆர்வலர்களது எண்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொண்டிருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத செயல் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும்நோக்கிலேயே தங்களது Pegasus சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு வழங்கியிருப்பதாக இஸ்ரேல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.