இந்தியா

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்று ஏமாற்றமடைந்த புதுச்சேரி போலீசார்

webteam

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக, நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய அம்மாநில போலீசார் நாகர்கோவில் சென்றனர்.

பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது புதுச்சேரி மாநிலம் நெல்லிகுப்பம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திய லிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை அவதூறாக பேசியதாக, தவளை குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி விசாரணைக்கு புதுச்சேரி அரியங்குப்பம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கான பதிலை நாஞ்சில் சம்பத் நேற்று தபாலில் அனுப்பி உள்ளார். ஆனால் புதுச்சேரி போலீசார், எவ்வித சம்மனும் இல்லாமல் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய இன்று தக்கலை அருகே உள்ள மணக்காவிளை வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கைதாக நாஞ்சில் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி சம்மனுக்கு ஆஜராகுவேன் என நாஞ்சில் சம்பத் எழுதி கொடுத்ததையடுத்து புதுச்சேரி போலீசார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.