சோனம் வாங்சுக் Pt web
இந்தியா

டெல்லி | சோனம் வாங்சுக்-ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை.. அபிஜித் திப்கே கைது!!

டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அவரை காவல்துறையினர் இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Premkumar S

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது, போராட்டம் இன்றுடன் 21-வது நாளை எட்டியிருக்கிறது. மருத்துவ பரிசோதனையில், அவர் 9 கிலோ வரை எடை குறைந்திருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

சோனம் வாங்சுக்

எனினும், சோனம் வாங்சுக் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து வந்தார். தொடர்ந்து, 20 நடைபெறும் நாடாளுமன்ற முற்றுகையில் பொதுமக்கள் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்து வந்தார். இந்தசூழலில் தான், சோனம் வாங்சுக்கிற்கு உரிய மருத்துவ பரிசோதனை அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற முற்றுகைக்கு 2 நாட்களே இருக்கும் நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தின் 21 வது நாளான இன்று சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

மேலும், ஜந்தர் மந்தரில் போராடி வந்தவர்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். அதேபோல, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அபிஜித் திப்கே-வை காவல்துறை கைது செய்திருக்கிறது. இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”டெல்லி காவல்துறையினரால் நான் தாக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்து வந்ததால், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் நிபுணர் மருத்துவ ஆலோசனையின் பேரில் சமூக ஆர்வலர் அகற்றப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.