இந்தியா

ஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

ஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

webteam

ஒசூர் ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நந்தீஷ் - சுவாதி. இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒசூர் ராம்நகரில் தனியாக வாடகை எடுத்து இரண்டு பேரும் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரும் காணாமல் போயுள்ளனர். 

தகவல் அறிந்த நந்தீஷின் தம்பி சங்கர் தனது அண்ணனையும் அவரது மனைவியும் கண்பிடித்து கொடுக்குமாறு ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலகவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி ஆற்றில் நந்தீஷ் சுவாதி இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பெண்ணின் உறவினர்கள் கடத்தி சென்று ஆவணக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.