இந்தியா

பீமா கோரேகான் வழக்கு - கவிஞர் வரவர ராவின் ஜாமீன் நீட்டிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பட்டியலின சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோதலை தூண்டிவிட்டதாக இடதுசாரி ஆர்வலர்களை கைது செய்தனர். இதில் கவிஞர் வரவர ராவும் ஒருவர்.

இதனிடையே, தனது உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது ஜாமீன் ஜூலை 13-ஆம் தேதியுடன் (நாளை) முடிவடையவுள்ள சூழலில் அவருக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதுவரை வரவர ராவின் ஜாமீனை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.