பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 ஊழியர்கள் சஸ்பெண்ட் செட்டப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுத்துறை வங்கிகள் 2 மற்றும் 1 தனியார் வங்கிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் தெரிகிறது.
மோசடி செய்ததாக தேடப்படும் நீரவ் மோடி, வெளிநாடு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பண மோசடி வழக்கில் இருந்து தப்ப, விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் நீரவ் மோடியும் வெளிநாடு தப்பியிருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன. அவர் ஹாங்காங் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுவதால், விமான நிலைய ஆவணங்களை சிபிஐ ஆராய்ந்து வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவற்றிலும் நூதன வழியில் புரிந்துணர்வு கடிதத்தை மோசடியாக பயன்படுத்தி நீரவ் கடன் பெற்றிருக்கக் கூடும் என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் உத்தரவாதத்தைப் பெற தவறி விட்டதாகவும் சிபிஐ தரப்பில் புகார் கூறப்படுகிறது.