இந்தியா

'ஜன் சமர்த் தளம்' - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

JustinDurai

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை புதுதில்லியின் விக்யான் பவனில் நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. ஜன் சமர்த் தளம் என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான தேசிய தளத்தை பிரதமர் அறிமுகப்படுத்துவார். இது, அரசின் கடன் திட்டங்களை இணைக்கும் ஒரு-நிறுத்த டிஜிட்டல் தளமாகும். பயனாளிகளை, கடன் வழங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கும் முதல் தளம், இதுவாகும்.

எளிதான மற்றும் சுலபமான டிஜிட்டல் நடைமுறைகளின் வாயிலாக சரியான அரசின் பயன்களை பல்வேறு துறைகளுக்கு வழங்கி, வழிகாட்டுவதன் மூலம் அவற்றில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதே ஜன் சமர்த் தளத்தின் முக்கிய நோக்கமாகும். இணைக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களின் முழுமையான பயன்களை இந்தத் தளம் உறுதி செய்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களின் பயணங்களை விவரிக்கும் டிஜிட்டல் கண்காட்சியைப் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களின் சிறப்புத் தொகுப்பை பிரதமர் வெளியிடுவார். இந்த சிறப்பு நாணயங்களில் விடுதலையின் அமிர்த மகோத்சவ இலச்சினையின் கருப்பொருள் இடம்பெற்றிருப்பதுடன், பார்வையற்றோர் எளிதில் கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 75 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இந்த அனைத்து நிகழ்வுகளும் பிராந்திய நிகழ்ச்சியுடன் காணொலி வாயிலாக இணைக்கப்படும்.

இதையும் படிக்கலாம்: பாஜகவில் இணைகிறாரா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா?