இந்தியா

'விஷமத்தனமான கருத்துகள் பரவுவதை தடுங்கள்' - பிரதமருக்கு நசிருதீன் ஷா வேண்டுகோள்

JustinDurai

முகமது நபிகள் குறித்த பாஜக பிரமுகரின் கருத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலையிட்டு இவ்விவகாரத்தில் மேலும் விஷமத்தனமான கருத்துக்கள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்று பாலிவுட் மூத்த நடிகர் நசிருதீன் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னையால் நுபுர் ஷர்மாவை பாஜக கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்துவிட்டது. ஆனாலும் இந்தப் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், பிரதமர் தலையிட்டு இவ்விவகாரத்தில் மேலும் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா. இதுதொடர்பாக நடிகர் நசீருதின் ஷா கூறுகையில், ''இதுபோன்ற நபர்களுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை புகட்டுமாறு நான் பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை வைக்கிறேன். பிரதமர் மோடி தலையிட்டு இந்த விவகாரத்தில் மேலும் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்தது சற்று தாமதமான நடவடிக்கை. அவர்கள் வாயைத் திறந்து இதுபோன்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவே ஒரு வாரம் ஆகியுள்ளது. இதே போன்ற சம்பவம் பாகிஸ்தானிலோ ஆப்கானிஸ்தானிலோ நடந்திருந்தால் உடனே மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுக்கு ஆறுதல் கூட கிடைக்கவில்லை.

இதை முறையான மன்னிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. மறுபடியும் இது போன்ற வெறுப்பான ஒரு பேச்சு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பற்றி பேசிவிட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெறுவதும், இனப்படுகொலை செய்துவிட்டு கையில் ஒரு அடியை வாங்குவதும் முற்றிலும் முரண்பாடானது. இங்கு நிறைய இரட்டை தர நிர்ணயம் மற்றும் ஏற்றதாழ்வுகள் உள்ளன. இதுபோன்ற விவகாரங்களில் வெறுப்பு மிகவும் அதிகமாக மக்களிடம் பரவுவதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம் இருக்கிறது'' எனக் கூறினார்.

இதையும் படிக்கலாம்: 'இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' - அல்கொய்தா மிரட்டல்