பிரதமர் நரேந்திர மோடி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியளித்தார். அதில் தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையிலான நட்புறவு நன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற முடியாது என பிரதமர் நரேந்திர மோடியிடம் தாம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உதவினால், குடியரசுத் தலைவர் பதவி வழங்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்திருந்ததாக வெளியான தகவலை மறுத்த சரத் பவார், மத்திய அமைச்சரவையில் தனது மகளான சுப்ரியா சூலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முன் வந்தார் எனவும் தெரிவித்தார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தபோது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். மாநிலங்களவையின் 250வது சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது கூட, நாடாளுமன்ற மரபுகளை மீறாமல் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் நடந்து வருவதாக புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.