இந்தியா

அத்திவரதரை தரிசிக்க மோடி வருகை !

webteam

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகளும், தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர்.

உலகப் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் அருள்பாலித்து வாருகிறார். 48 நாட்கள் நடக்கும் இந்த அத்திவரதர் திருவிழாவுக்காக இந்தியா முழுவதும் பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் அத்திவரதரை காண பலர் வரத் தொடங்கியுள்ளனர். இந்த திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எட்டாம் நாளான இன்று இளஞ்சிவப்பு வண்ண பட்டாடையில் அத்திவரதர் காட்சி அளிக்கிறார். அத்திவரதர் தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரம் வருகிறார். ஜூலை 23 ஆம் தேதி சயனக் கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசித்து, மறுநாள் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்கிறார் மோடி. மேலும் பிரதமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் அன்று அத்திவரதரை தரிசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 7 நாட்களில் ஏழு லட்சத்து 65 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.