இந்தியா

ஆள் உயரக் குத்துவிளக்கில் ஒளியை ஏற்றினார் பிரதமர் மோடி 

webteam
பிரதமர் மோடி  அவரது வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு குத்துவிளக்கில் ஒளியை ஏற்றினார். 
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றி, கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 3 ஆம் தே காலை 9 மணிக்குக் காணொளி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 130 கோடி மக்கள் வீட்டிலிருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளார். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” என்றார்.
மேலும், “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைக் குறித்துச் சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டின் மின்சார விளக்குகளை அணைத்து தீபங்கள் ஏற்றினர். சிலர் டார்ச் லைட் அடித்து ஒளி எழுப்பினர். அதன்படி பிரதமர் மோடி, அவரது  வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு குத்துவிளக்கின் மூலம் தீபத்தை ஏற்றினார். ஆள் உயரக் குத்துவிளக்கிலிருந்த திரிக்கு அவர்  சிறு விளக்கு மூலம் தீயைப் பற்றவைத்தார்.  அப்போது அவர் வேட்டி மற்றும் குர்தாவை அணிந்திருந்தார்.