பிரதமர் மோடி முகநூல்
இந்தியா

இரண்டு நாள் சுற்றுப்பயணம் பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்றடைந்தார்.

PT WEB

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்றடைந்தார்.

விமான நிலையம் அருகே திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து எலிசி மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். பின்னர் அவருக்கு இரவு உணவு விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்

வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான மார்சேயில் முதலாவது இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலைத்திட்டத்தை பார்வையிட உள்ளார்.

முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களின் போது உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்த உள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.