இந்தியா

“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி

“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி

webteam

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்ற சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதல்வராக இருந்த அஜித் பவாரும் கடந்த 26-ஆம் தேதி ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்னர் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில் உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி. மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.