இந்தியா

இந்தியப் பொருளாதாரம் மிகவும் தாராளமயமானது: பிரதமர் மோடி பேச்சு

webteam

உலகிலேயே மிகவும் தாராளமய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, கொரியா இடையே டெல்லியில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் பேசும்போது இதை அவர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம் செய்வதற்கு நிலையான, பாதுகாப்பானச் சூழலை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக கூறிய பிரதமர், தொழில் தொடங்குவதற்கான அனுமதி குறித்து முடிவெடுப்பதில் மத்தியஸ்த நடைமுறையை நீக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொழில்துறையினரின் சந்தேகங்களை அதிகரிப்பதைத் தவிர்த்து, நம்பிக்கையையும் நேர்மறை எண்ணத்தையும் தினசரி அடிப்படையில் அரசு எதிர்பார்ப்பதாகவும் மோடி கூறியுள்ளார். 

வாங்கும் சக்தி அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, விரைவில் பொருளாதார வளர்ச்சி வேக அடிப்படையில் உலகின் 5வது பெரிய நாடாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரியாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அதிகளவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முன்வர வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.