இந்தியா

மீனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

webteam

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கன்னியாகுமரியில் ஒகி பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் கேரளா சென்ற பிரதமர், புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பூந்துறா பகுதியில் மீனவ மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீனவ மக்களின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மீனவ மக்களிடம் அவர் உறுதியளித்தார்.

கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்வோம் என்று பிரதமர் கூறினார். இதையடுத்து திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஓகி புயல் பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது, புயல் சேதங்கள், மக்களின் பாதிப்புகள், மீனவர்களின் துயரங்கள் குறித்தும் அவர் கருத்துக் கேட்டார். பின்னர் தமிழகம், கேரளா, லட்சத்தீவுக்கு புயல் நிவாரணமாக ரூ.325 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் புயலால் சேதமடைந்த சுமார் 1400 வீடுகள் புதிதாகக் கட்டித் தரப்படும் என்று மோடி கூறினார்.