இந்தியா

பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12-ம் தேதி நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி நேரில் கலந்துக்கொள்ள இருந்த நிலையில், தற்போது அது தடைபட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த தடை நடந்திருப்பதாக தெரிகிறது. நேரில் வரவில்லை என்றாலும், மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “புதுச்சேரியில் பொங்கல் நிகழ்வையொட்டி, ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்களுடன் ரேசன் அட்டைக்காரர்களுக்கு பரிசுத்தொகுப்பு தரப்படும்” என்று அவர் கூறியுள்ளார். இவற்றுடன், புதுவையில் தற்போதுவரை ஆளுநருடன் இணைந்த நிலையே நீடிப்பதாகவும், தங்களுக்குள் எவ்வித முரணும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல பிரதமர் பங்கேற்க இருந்த மதுரை ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியும் அதை ஒருங்கிணைத்த தமிழக பாஜக-வால் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுதொடர்பான தனது அறிவிப்பில், கொரோனா அச்சம் காரணமாகவே இந்தத் தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.