மேற்கு ஆசியப் போர் தொடர்பாக இந்தியாவின் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் காணொளி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. சில நாடுகளில் மூன்று மடங்கு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயுவில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கான மாற்று வசதிகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதற்குப் பதிலாக 10 சதவிகித கலால் வரியைக் குறைத்துள்ளது. என்றாலும், கலால் வரியை மத்திய அரசு குறைத்ததற்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமிருக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு ஆசியப் போர் தொடர்பாக இந்தியாவின் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் காணொளி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்க ஆகிய மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பலரும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மத்திய அரசு எந்த அறிக்கையும் விடவில்லை. ஆகையால், இதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் எரிபொருள் விநியோகம் சீராகக் கிடைப்பதாகவும் அது விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி, ஊரடங்கு குறித்த தகவல்கள் தவறானவை. அதுகுறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம், மத்திய அரசின் பரிசீலனையில் ஊரடங்கு குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை. பிரதமரின் தலைமையின்கீழ், நாட்டிற்குள் எரிபொருள், ஆற்றல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது” என உறுதிப்படத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொரோனா காலத்தைப் போன்று இந்தியாவில் மீண்டும் "லாக்டவுன்" வராது என தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.