மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவு வருத்தமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜி மறைந்ததில் வருத்தம். வணிகம் மற்றும் சமூக சேவையில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அவருடனான சந்திப்பின் போதெல்லாம், அவர் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியதை கண்டிருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.