இப்போதெல்லாம் "தி டைமண்ட் சிட்டி" என்ற பெயர் மூலம் அறியப்படுகிறது குஜராத் மாநிலத்தின் சூரத். அதற்கு காரணம், 7.1 மில்லியனுக்கும் அதிகமான அளவு சதுர பரப்பளவு கொண்ட அமெரிக்காவின் பெண்டகனை (வைர வர்த்தக கட்டம்) மிஞ்சும் அளவுக்கு சூரத்தில் அமைந்துள்ள புதிய வைர பங்குச்சந்தை கட்டடம்!
Surat Diamond Bourse (SDB) எனப்படும் இது, இந்தியாவின் இரண்டாவது வைர வர்த்தக மையம். இந்திய கட்டடக்கலை நிறுவனமான மோர்போஜெனீசிஸால் (MORPHOGENESIS) வடிவமைக்கப்பட்ட இக்கட்டடம், 15 மாடிகளை கொண்டது. 35.54 ஏக்கர் பரப்பளவு - 67 லட்சம் சதுர அடியில் - 4,500 வர்த்தக வளாகங்களை இது தன்வசம் கொண்டுள்ளது. சுமார் 67,000 வைர வியாபாரிகள் இங்கு வர்த்தகம் செய்ய முடியுமென சொல்லப்படுகிறது.
தேசிய மற்றும் உலகளாவிய வர்த்தக நோக்கத்திற்காக இந்த வர்த்தக மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளாக கட்டப்பட்ட இக்கட்டடம் குறித்து, கட்டடக்கலை நிறுவனத்தின் இணை நிறுவனரான சோனாலி ரஸ்டோகி சமீபத்தில் கூறுகையில், “9 கட்டடங்களை உள்ளடக்கி இந்த வணிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வணிகர்கள் சந்திப்பதற்கும் வணிகரீதியான நடவடிக்கைகளை பற்றி பேசுவதற்கும் ஏற்ற இடமாக இது அமையும். மேலும் பாரம்பரிய பஜார்களை சித்தரிக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றுள்ளார்.
இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியான மகேஷ் காதவி கூறுகையில் ”வணிகத்திற்காக அன்றாடம் மக்கள் பயணம் செய்து வருவது கடினமாக இருக்கின்ற நிலையில் அவர்களது பயணச்சுமையை குறைக்க உதவும் வகையில் இந்த கட்டடம் நிச்சயம் அமையும்” என்றுள்ளார்.
இப்பிரம்மாண்ட கட்டடம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் வர்த்தகம், புதிய சிந்தனைகள் போன்றவற்றை பெருக்கவும், நமது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த Surat Diamond Bourse உதவும்” என்றுள்ளார்.
- ஜெனிட்டா ரோஸ்லின்