இந்தியா

இந்தியா- வங்கதேசம் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து...!

இந்தியா- வங்கதேசம் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து...!

Rasus

இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பிரதமர் மோடி இடையே இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது, 6 முதல் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.

டெல்லியில் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. அப்போது போக்குவரத்து, தகவல் தொடர்பு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 6 அல்லது 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.

குறிப்பாக, மூன்று திட்டங்களை இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து தொடங்கி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா, வங்கதேசம் இடையே பொதுவாக நெருக்கமான உறவு இருந்ததில்லை என்று கூறிய ரவீஷ்குமார், இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பேச்சு நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பு, வர்த்தகம், கலாசாரம் ஆகியவை பற்றி இருதலைவர்களும் விவாதிக்க இருப்பதாகவும் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பொருத்தவரை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற அவர், அதுபற்றி இந்திய, வங்கதேச தலைவர்களின் பேச்சில் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.