இந்தியா

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி

rajakannan

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 62 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், மக்களவை சபாநயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எம்.பிக்கள் பலரும் மரியாதை செலுத்தினர். 

சென்னை காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் தலைவர் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அனைவரும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.