இந்தியா

உ.பி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்க்கு பிரதமர் உத்தரவு!

உ.பி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்க்கு பிரதமர் உத்தரவு!

JustinDurai

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் பெண் ஒருவர், வயல் வெளியில் வேலை பார்த்த போது அக்கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அவர் வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் நாக்கை அந்த கொடூரர்கள் வெட்டியுள்ளனர். 

மேலும் அவரின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசியும் சென்று உள்ளனர். இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்ததாக தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று இறந்தார். இறப்பதற்கு முன்பு அந்த பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில்  உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் தன்னிடம் அறிவுறுத்தியதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இவ்வழக்கு விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.