Tattoo  web
இந்தியா

டாட்டூ தொழில்.. ஒழுங்குபடுத்தக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!

பச்சை குத்தும் தொழிலை நாடு முழுவதும் ஒழுங்குபடுத்தவும், கட்டாயப் பாதுகாப்புத் தரங்களை அமல்படுத்தவும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

PT WEB

உடலில் டாட்டூ குத்திக்கொள்வது பரவலாகியுள்ள நிலையில், அத்தொழிலை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் சவுத்ரி என்ற வழக்கறிஞர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், இந்தியாவில் பச்சை குத்தும் துறை (Tattoo industry) கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக விரிவடைந்துள்ளது; இதன் ஆண்டு மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், எவ்விதமான சட்டரீதியான கட்டமைப்பு அல்லது மத்திய அரசின் ஒழுங்குமுறை மேற்பார்வை ஏதுமின்றி இத்துறை தொடர்ந்து இயங்கி வருகிறது.

Tattoo

டாட்டூ பார்லர்களுக்கு உரிமம் தருவது, டாட்டூ ஊசிகள் உள்ளிட்ட உபகரணங்களை உரிய முறையில் தூய்மைப்படுத்துவது, சிறுவர்களுக்கு டாட்டூ குத்தும் முன் பெற்றோரிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட பரிந்துரைகள் இம்மனுவில் கூறப்பட்டுள்ளது. முறையற்ற சுகாதார நடைமுறைகள், அசுத்தமான உபகரணங்கள் மற்றும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, இத்துறையில் ஒழுங்குமுறைகள் இல்லாத நிலை தனிநபர்களைத் தீவிர உடல்நல அபாயங்களுக்கு உள்ளாக்குவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய காரணிகள், ஹெபடைடிஸ் B, ஹெபடைடிஸ் C மற்றும் HIV உள்ளிட்ட இரத்தம் மூலம் பரவும் நோய்கள் தொற்றிக்கொள்ள வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.