இந்தியா

மக்கள் தொகையை கட்டுப்படுத்த திட்டம் - அசாம் அரசு அதிரடி

webteam

பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இங்கு, மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது' என, அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநில சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரும், 2018 ஏப்ரல் முதல் அமல்படுத்தும் வகையில் புதிய சட்டம், சட்டசபையின் அடுத்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், அரசுப் பணிகளில் மட்டுமல்ல, அரசின் எந்த சேவையிலும் ஈடுபட முடியாது, கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கும் போட்டியிட முடியாது." என்றார்.

மேலும் "பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்கு பதில், அந்தக் குடும்பத்துக்கான புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு, அரசின் நலத் திட்ட பலன்களும் வழங்கப்படாது" என்றும் தெரிவித்தார்.