ராகுல்காந்தி - பியூஷ் கோயல் Pt web
இந்தியா

"ராகுல் காந்தியை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை" - பியூஷ் கோயல்

கரப்பான் ஜனதா கட்சி போராட்டத்தை பாஜக கையாண்டது தொடர்பான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

Premkumar S

நீட் வினாத்தாள் கசிவுக்கு முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், நாடாளுமன்ற பேரணி மீது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை கடந்த 2026 ஜூலை 25 அன்று ராஜினாமா செய்தார். அதன்பிறகு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

ராகுல்காந்தி

இதற்கிடையில் தான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை மத்திய பாஜக அரசு கையாண்ட விதம் குறித்தும், கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதலுக்கு காரணமான உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் கொடுக்க துணிச்சல் இல்லாமல் இருக்கிறார் எனவும் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் பேசியிருந்தார்.

இந்தச்சூழலில் தான், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ராகுல் காந்தியின் பேச்சை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், அன்று சூழல் மிகவும் சரியாகவே கையாளப்பட்டது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.