இந்தியா

``மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிப்பணியாது"- பினராயி விஜயன்

நிவேதா ஜெகராஜா

மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிப்பணியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் சமீபத்தில் ஆடியோவொன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவால் கேரளாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த ஆடியோவில் மாநில அரசுடன் நெருங்கிய தொடர்புடைய நபர் எனக் கூறப்படும் பத்திரிகையாளர் ராஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசியதாக தெரிகிறது. அதில் ராஜ் கிரண், முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டை சகித்துக் கொள்ளமாட்டார் என்றும், எனவே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

ராஜ் கிரண் பத்திரிகையாளர் எனக் கூறப்படும் நிலையில், முழுமையான உரையாடல் பதிவை வெளியிடப்போவதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து, கேரள அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவற்றுக்கே தற்போது முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினையாற்றியுள்ளார்.

கோட்டயத்தில் உள்ள கேரள கெசட்டட் அதிகாரிகள் சங்கத்தின் 56ஆவது ஆண்டு மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டத்தை தொடங்கி வைத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அரசு வழங்கி வருகிறது. மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது. எந்த விதமான தந்திரங்களும் இங்கு வேலை செய்யாது. அரசை அசைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது தவறு” என தெரிவித்தார்.