இந்தியா

"ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணை!" - பினராயி விஜயன்

webteam

சபரிமலை ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு துணை இருக்கிறார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியிருக்கிறார்.

கேரளாவை பொறுத்தவரை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இருக்கும் விமர்சனங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம். பெண்களை கோயிலுக்குள் நுழைய அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பை அரசு எவ்வாறு கையாண்டது என்பதுதான் மார்க்சிஸ்ட் குறித்த கேரள தேர்தலின்போது முக்கிய விவாதங்களில் ஒன்றாக இருந்தது.

யுடிஎஃப் மற்றும் என்டிஏ இரண்டு கூட்டணிகளும் ஆளும் எல்.டி.எஃப் அரசு ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டியது. இதேபோல், நாயர் சர்வீஸ் சொசைட்டியின் தலைவர் சுகுமரன் நாயர் என்பவர் சமீபத்தில் ஐயப்பனின் கோபம் எல்.டி.எஃப் மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த விமர்சனத்துக்கு இன்று தனது தொகுதியில் வாக்களித்த பின் பதில் கொடுத்த முதல்வர் பினராயி விஜயன், ``குமரன் நாயர் ஒரு ஐயப்ப பக்தர் என்பதால் சொல்வதற்கு வழி இல்லை. ஐயப்பனும், மற்ற எல்லா கடவுள்களும் மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களின் கடவுள்களும் கூட இந்த அரசாங்கத்துடன் (எல்.டி.எஃப்) உள்ளனர். ஏனெனில், இந்த அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கிறது. எல்.டி.எஃப் அரசாங்கம் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தது. எல்லா கடவுள்களும் மக்களுக்கு நல்லது செய்பவர்களுடன் இருக்கிறார்கள். அதைத்தான் நீங்கள் காண வேண்டும்.

இந்தத் தேர்தலில் மக்களின் பலம் நிரூபிக்கப்படும். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் அனைத்து போலி குற்றச்சாட்டுகளும் மக்களால் நிராகரிக்கப்படும். மக்கள் எப்போதும் அரசாங்கத்துடன் இருந்திருக்கிறார்கள். வரலாற்று ரீதியான வெற்றியை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியிருக்கிறார்.

பினராயின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் கொடுத்து இருக்கின்றனர். ``முதல்வர் பினராயி ஐயப்ப கடவுளை எவ்வளவு கூப்பிட்டாலும், அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடைக்க போவதில்லை" என்று காங்கிரஸ் எம்.பி.யும் நேமமின் வேட்பாளருமான வி முரளீதரன் கூறினார்.

இதேபோல், ``முதல்வரின் இந்த கருத்துக்கள் அவர் மக்களின் தீர்ப்பை நினைத்து அஞ்சுவதை வெளிக்காட்டுகிறது. ஆனால் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறியுள்ளார்.