இன்று சமூக வலைதளங்கள் மூலம் பல போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022 முதல் நடப்பாண்டு மார்ச் 19 வரை மத்திய அரசுக்கு எதிராக இதுவரை மட்டும் 1,575 போலிச் செய்திகள் வெளியாகி இருப்பதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 1 முதல், நடப்பு மார்ச் 19 வரை பிஐபி-யின் (Press Information Bureau) உண்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் போலிச் செய்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுதல் தொடர்பாக 5,200 செய்திகள் கிடைக்கப் பெற்றன. இதில் 1,811 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது எனக் கண்டறியப்பட்டது. இதில் 97 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு 25,626 போலிச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 8,107 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது எனக் கண்டறியப்பட்டது. இதில், 338 செய்திகள் போலியானது என கண்டறியப்பட்டது. 2023ஆம் ஆண்டு 20,684 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,623 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது எனக் கண்டறியப்பட்டது. இதில் 557 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது. 2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,320 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது எனக் கண்டறியப்பட்டது. இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.