மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 18-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ உதவி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டாவில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, அந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகிய நிலையில், ஆளும் பாஜகவின் சமூக வலைதளப் பக்கங்களைவிட அதிக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெற்றது. சமூக வலைதளங்களில் மட்டுமே, அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்த அந்தக் கட்சி, தொடர்ச்சியான, நீட் மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகளுக்குப் பிறகு, கடந்த கடந்த ஜூன் மாதம் டெல்லியில் முதன்முறையாக போராட்டத்தில் ஈடுபட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதுடன், அக்கட்சியின் நிறுவன அபிஜீத் திப்கேவும் கலந்துகொண்டார். தொடர்ந்து, அக்கட்சியினர் கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதுடன், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுத்தினர்.
டெல்லியைத் தொடர்ந்து, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 18-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு மருத்துவ உதவி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராகேஷ் குமார் சைனி தாக்கல் செய்துள்ள பொதுநல அந்த மனுவில், ’வாங்சுக் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால், இரண்டு நாட்களில் அவர் உயிரிழக்க நேரிடும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என பார் அண்ட் பெஞ்ச் அறிக்கை தெரிவிக்கிறது. வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாகவும், அவர் காலமானால் அது நாட்டிற்கும் உலகிற்கும் பெரும் அவமானமாக அமையும் என்றும் அந்த மனு சுட்டிக்காட்டியுள்ளது.
வாங்சுக்கின் சமீபத்திய உடல்நிலை அறிக்கையின்படி, அவர் சுமார் 8.5 கிலோ எடை இழந்துள்ளார், மேலும் அவரது ரத்த அழுத்தம் 109/70 ஆகக் குறைந்துள்ளது. ஜூன் 28 அன்று தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய வாங்சுக்கிற்கு, கல்வியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினரிடமிருந்து பெரும் ஆதரவு அலை எழுந்துள்ளது. எனினும், அவர்கள் தொடர்ந்து வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.