இந்தியா

₹500 கேட்டா ₹2500 கொடுக்குமா? வாரி வழங்கிய ATM : நாக்பூரில் நடந்த சுவாரஸ்யத்தின் பின்னணி!

JananiGovindhan

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போது டெபிட் கார்ட்டை செலுத்தி முறையாக எல்லா வழிமுறைகளையும் நிரப்பினாலும் பணம் வெளியே வருவதற்கு பதில் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடிக்கப்பட்டதாக மெசேஜ் வந்து வாடிக்கையாளர்களை பயமுறுத்தச் செய்யும். இது போன்ற சம்பவங்களே பொதுவாக பல முறை நடந்திருக்கும் வேளையில், கேட்ட பணத்தை விட ஐந்து மடங்கு பணம் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?

அப்படியான சுவாரஸ்ய சம்பவம்தான் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நேற்று (ஜூன் 15) நடந்தேறியிருக்கிறது. ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள். நாக்பூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கபர்கேடா என்ற டவுனில் உள்ள ஏ.டி.எம்மில்தான் கேட்டதை விட அதிகபடியான பணம் வந்திருக்கிறது.

அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுப்பதற்காக சம்பவம் நடந்த ஏ.டி.எம்மிற்கு சென்றிருக்கிறார். அங்கு 500 க்கு பதில் 2,500 ரூபாய் அவருக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய்தான் டெபிட் ஆகியிருப்பதாக உள்ளது. அதனால் உறுதிசெய்ய 500 ரூபாயை எடுத்தபோது மீண்டும் 2500 ரூபாய் வந்திருக்கிறது.

இதனால் முகம் நிறைய பூரிப்புடன் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது ஏராளமான மக்கள் , “நான்லாம் பாய்சன் கிடைச்சாலே பாயசம் மாதிரி சாப்டுவேன்.. பாயசமே கிடைச்சுருக்கு சும்மா விடுவனா”தனுஷ் பட வசனம் போல, ஏ.டி.எம். முன்பு குவிந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஏ.டி.எம். முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியதை கண்ட அப்பகுதி போலீசார் என்னவென்று விசாரித்ததில் விஷயம் தெரியவர வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் ஏ.டி.எம் மையத்தை பூட்டி, மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏ.டி.எம் மிஷினில் 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட வேண்டிய ட்ரேயில் 500 ரூபாய் நோட்டுகள் வைத்ததால் ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கு காரணம் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: