தெலங்கானாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியால் அந்த நகரமே முடங்கியது.
தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போரட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை கையிலெடுத்தனர். பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சில தினங்களுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுஒருபுறம் இருக்க சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு ஆதரவாகவும் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன், மூன்று கோடி குடும்பங்களை சந்தித்து இந்தச் சட்டம் குறித்து விளக்கம் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான அன்ல் ஜெயின், ஜனவரி 5 ஆம் தேதி முதல் பாஜக தலைவர்கள் வீடுவீடாக சென்று விளக்கம் அளிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ஹைதராபாத் நகரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராக மாபெரும் பேரணி நடந்தது. அதனால் அந்த நகரமே முடங்கியது. அரசியல் தலைவர்களின் தலைமை ஏதும் இல்லாமல் வெறும் தேசிய கொடியை பிடித்த படி போராட்டக்காரர்கள் நடைபயணமாக சென்றனர். இதேபோல் கர்நாடகாவிலுள்ள கோலார் நகரத்தில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது. அதற்கான புகைப்படங்களை ஏஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.