விஜய் - பவன் கல்யாண் web
இந்தியா

விஜயின் அரசியல் எழுச்சி.. விலகி நின்ற ஆந்திரா.. உண்மையை உடைத்த பவன் கல்யாண்!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது.

Prakash J

ஆந்திரப் பிரதேச துணை முதலவரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தனது அரசியல் பயணத்தையும் விஜயின் அசுர வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பெரும்பான்மை இல்லாத போதிலிம் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். இந்த நிலையில், அவருடைய வளர்ச்சியைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

விஜய்

மங்களகிரியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஜனசேனா தொண்டர்களிடம் பேசிய பவன் கல்யாண், ”தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சரானதைப் பார்த்த பிறகு, ஆந்திரப் பிரதேசத்தில் நாங்கள் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் சூழ்நிலைகள் ஆந்திரப் பிரதேசத்தின் சூழ்நிலைகளிலிருந்து வேறுபட்டவை. அரசியல் சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நான் இந்தக் கட்சியைத் தொடங்கினேன். நான் என்.டி.ஆரின் அரசியல் பயணத்தை உன்னிப்பாகக் கவனித்தேன். மேலும், சித்தாந்தத்தால் உந்தப்பட்டு பல இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த நக்சலிசக் காலத்தையும் நான் கண்டேன். அந்த அனுபவங்கள் என் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை, பதவிகளையோ அதிகாரத்தையோவிட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பதே எப்போதும் முக்கியமானது. அந்த உணர்வுடன்தான் நான் இந்தக் கட்சியை முன்னோக்கிக் கொண்டு சென்றேன். இப்போதும்கூட, தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைப்பதற்குப் பதிலாக நாம் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள். தனித்துப் போட்டியிடும் பலம் நம்மிடம் இருந்தது. ஆனால், ஆந்திரப் பிரதேசம் அப்போது ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருந்தது. சந்திரபாபு நாயுடு போன்ற ஒரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, ​​அது ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு நெருக்கடியான தருணமாக அமைந்தது. சில விஷயங்களில் அவருக்கும் நமக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம், ஆனாலும் நாம் தொடர்ந்து அவருடன் கலந்துரையாடிப் பேசினோம். ’மாநிலத்தின் எதிர்காலத்திற்கு கூட்டணி அரசியல் அவசியமாகிறது’ என அவர் வலியுறுத்தினார். இதனாலேயே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். ஆதலால், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது” என்றார்.

பவன் கல்யான்

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா, தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.