ஜூன் 24-ம் தேதி இந்தியாவின் 14-வது பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், எனவும் இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல என்று விளக்கம் அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை இந்த விளக்கத்தால், சாதாரண குடிமக்களுக்கு வீண் பதற்றமும் அச்சமும் ஏற்படும் என்றும், அரசை எதிர்க்கும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிக்கவே அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதன்படி, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள, காங்கிரஸின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ”பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் அரசு குடியுரிமை உள்ளிட்ட பல அம்சங்களை சரிபார்க்கிறது. அப்படியிருக்க, அந்தச் சரிபார்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டையே குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று கூறுவது தர்க்கரீதியாக முரண்பாடானது. எனவே, பாஸ்போர்ட்டை சட்டப்படி குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ சான்றாக அங்கீகரிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் உள்நாட்டுக் குடியுரிமையை நிலைநாட்டவில்லை என்றால், வேறு எதுதான் நிலைநாட்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியர் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம் என்பதால் அது குடியுரிமைக்கான ஆவணமாக எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை என்றும், இது அரசின் புதிய முடிவு அல்ல என்றும் மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.