புகைப்பிடிப்பவர்களைவிட அவர்கள் அருகில் இருப்போருக்குத்தான் பாதிப்பு அதிகம். இந்தியாவில் இத்தகைய பேசிவ் ஸ்மோக்கிங் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தி லான்செட் கட்டுரை கூறுகிறது. அதாவது, 1990இல் பேசிவ் ஸ்மோக்கிங் காரணமாக இந்தியாவில் 2,17,700 பேர் உயிரிழந்த நிலையில், 2023இல் இந்த எண்ணிக்கை 3,25,600ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், ஒரு லட்சம் பேருக்கான மரண விகிதம் 46.1 இருந்து 30ஆக குறைந்துள்ளது. 2023இல் இந்தியாவில் சுமார் 44 கோடியே 40 லட்சம் பேர் பேசிவ் ஸ்மோக்கிங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 271 கோடி பேர் பேசிவ் ஸ்மோக்கிங்கால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 76 கோடிக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் என அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியை பாதிக்கும் பேசிவ் ஸ்மோக்கிங்கை தடுக்க, வீட்டிலும் பொது இடங்களிலும் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.