இந்தியா

நவம்பர் 19 ஆம் தேதி பகுதி சந்திர கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

Veeramani

வரும் நவம்பர் 19 அன்று பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும், அதுவும் சந்திர உதயத்திற்குப் பிறகுதான் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் தகவல்களின்படி, மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி சந்திரகிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று 12: 48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தெரியும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பவுர்ணமி நாளில்தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.