அதிர்ஷ்டம், அள்ளிக்கொடுக்கும் என்பார்கள். அதுவும் கோடிகளில் கொட்டிகொடுத்து, 2 தொழிலாளர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது, மத்திய பிரதேசத்தில்!
மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவைச் சேர்ந்த தொழிலாளர்கள், மோதிலால், ரகுவீர் பிரஜாபதி. இவர்கள் இங்குள்ள வைரச் சுரங்கத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம், பெரிய சைஸ் வைரம் ஒன்றை இவர்கள் கண்டெடுத்தனர். 42.59 காரட் எடை கொண்டது இந்த வைரம். இப்படி கண்டுபிடிக்கும் வைரங்களை மாவட்ட வைர அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைப்பது வழக்கம். அவர்கள் அதன் தரம் மற்றும் அளவை சரிபார்த்து, ஏலம் விட்டு பணம் பெறுவார்கள்.
அதன்படி, ஆச்சரியமடைந்த மோதிலாலும் பிரஜாபதியும் தாங்கள் கண்டெடுத்த வைரத்தை மாவட்ட வைர அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத் தனர். இரண்டு மாதத்துக்குப் பின் அந்த வைரம், மாவட்ட வைர அதிகாரி சந்தோஷ் சிங் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது. ஒரு கேரட்டுக்கு ரூ.6 லட்சம் என்ற கணக்கில் இந்த வைரம் ரூ.2.55 கோடிக்கு ஏலம் போனது. ஜான்சியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ராகுல் ஜெயின் என்பவர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சரண் சிங்குடன் வந்து இந்த வைரத்தை ஏலத்துக்கு எடுத்துள்ளார்.
(சரண் சிங்குடன், ராகுல் ஜெயின்)
இதற்கான 20 சதவிகித பணத்தை மாவட்ட வைர அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். பாக்கித் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குவதாக தெரிவித்து சென்றுள்ளனர்.
இதுபற்றி வைர அதிகாரி சந்தோஷ் சிங் கூறும்போது, ‘’வரி போக, 2.30 கோடி ரூபாய் அந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கும். அவர்கள் வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்படும்’’ என்றார்.
திடீர் கோடீஸ்வரர் ஆனது பற்றி, தொழிலாளர்கள் கூறும்போது, ‘இந்த பணத்தை கொண்டு எங்கள் கடனை அடைப்போம். குழந்தைகளை நன்றாக படிக்க வைப்போம்’ என்றனர்.