இந்தியா

“என் பாகிஸ்தான் மருமகளுக்கு விசா கிடைக்க உதவுங்கள்” - அமைச்சர் சுஷ்மாவுக்கு கோரிக்கை

“என் பாகிஸ்தான் மருமகளுக்கு விசா கிடைக்க உதவுங்கள்” - அமைச்சர் சுஷ்மாவுக்கு கோரிக்கை

webteam

பேரக்குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருக்கும் மருமகளை இந்தியா வருவதற்கு உதவி செய்ய வேண்டுமென மாமியார் ஒருவர் அமைச்சர் சுஸ்மா சுவராஜின் உதவியை கோரியுள்ளார்.

இது குறித்து ‘டைம்ஸ் நவ்’ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த வாஹத் உனிசா, ''2011ம் ஆண்டில் எனது மகனை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணான எனது மருமகள், 2018 வரை இந்தியாவிலேயே தங்கினார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு டிசம்பரில் தனது குழந்தைகளுடன்  எனது மருமகள் பாகிஸ்தான் சென்றுவிட்டார். 

ஆனால் தற்போது இந்தியா வருவதற்கு விசா வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் காரணமாக விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனது பேரக்குழந்தைகள் இந்திய குடிமகன்கள். அவர்களுக்கு இந்தியா வர பிரச்னை இல்லை. ஆனால் மருமகளுக்கு விசா வேண்டும். இந்திய தூதரம் விசா வழங்குவதில் சிக்கல் உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு விசா பிரச்னையை தீர்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

விசா உள்ளிட்ட பிரச்னைகளால் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் பலர் அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து, பிரச்னை தீர்க்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.