சமீர் கான், ஜாவேரியா கான்
சமீர் கான், ஜாவேரியா கான் ட்விட்டர்
இந்தியா

மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Prakash J

மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்

இன்று, உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகி அவர்கள்மீது காதல் வயப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருவதுடன், அதற்காக தங்களது இனம், மதம், மொழி கடந்து நாடுவிட்டுச் செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இந்தியா வர தயாராக உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சமீர் கான். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தன் தாயின் செல்போனை எதார்த்தமாக எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அவரது செல்போன் சேமிப்புப் புகைப்படங்களில், அழகிய பெண்ணின் புகைப்படம் ஒன்றும் இருந்துள்ளது. அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே காதல் வலையில் விழுந்துள்ளார். ஆம், தன்னுடைய முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துள்ளார். காதல் வந்துவிட்டால் போதும்; அது என்னென்ன மாயங்கள் செய்யும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அதுபோன்றுதான் சமீருக்கும் வந்துள்ளது.

இதயத்தில் பச்சை குத்திய சமீர் கான்

அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தால்தானே நிம்மதியான உறக்கம் வரும்; பேசிப் பழகினால்தானே மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடியும். சமீரும் அந்தப் பெண் குறித்து தாயாரிடம் விசாரித்துள்ளார். அவரும், அந்தப் பெண் தம்முடைய உறவினர் என்றும் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவருடைய பெயரையும் கேட்டுள்ளார். ஜவேரியா கான் என அந்தப் பெண்ணின் பெயரை, தன் தாயார் சொல்ல, அவ்வளவுதான்... அன்றுமுதல் சமீர் கான் அந்தப் பெயரை தன் இதயத்தில் பச்சை குத்தினார்.

பின்னர், தொலைபேசி வழியாகத் தொடர்ந்த அவரது காதலை, ஜவேரியா கானுவும் ஏற்றுக்கொண்டார். இவர்களது காதல், இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது. அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. நிச்சயத்திற்குப் பிறகும் இவர்களது காதல் தொடர்ந்ததே தவிர, திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. ஜாவேரியா கான், இந்தியாவுக்கு வருவதற்கு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்தியா வருவதற்கான ஜவேரியா கானுவின் விசா கோரிக்கை, இருமுறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏகப்பட்ட சிக்கல்கள். இதன்காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

முயற்சி செய்தால்தானே காதல்கூட வெற்றி பெறும்

அதற்குப் பின் உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடிய கொரோனா எனும் வைரஸ் அரக்கனால் அவர்களது திருமணம் இன்னும் இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போனது. ஆனாலும் தன்னுடைய காதலில் ஜெயிப்பதற்காகவும், சமீர் கானை மணப்பதற்காகவும் ஜாவேரியாவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்; விசாவுக்காக திரும்பத்திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தார். எதிலும் முயற்சி செய்தால்தானே வெற்றி கிடைக்கும். காதலாக இருந்தாலும் முயற்சி அவசியம்தானே. முயற்சி செய்தவர்கள்தானே, இந்த உலகில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜாவேரியாவும் தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். அவருக்குத் துணையாக சமீர் கானும் தன் பங்குக்கு உதவியுள்ளார். அவர்களுடைய முயற்சி வீண்போகவில்லை. கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு விசா வழங்க, இந்திய அரசு முன்வந்தது. பஞ்சாபைச் சேர்ந்த மக்பூல் அகமது என்ற சமூகச் சேவகரின் உதவியால் ஜவேரியா கானுவுக்கு தற்போது 45 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஜவேரியா கானும் வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று (டிச.5) வந்தார். அவரை வாகா எல்லையில் வருங்கால கணவர் சமீர் கானும், அவரது தந்தையும் வரவேற்றனர்.

ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட காதலர்கள்!

ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இந்த அன்புக்குப் பிறகு பேசிய ஜாவேரியா, “எங்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் எனக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. தற்போது, எனக்கு 45 நாள் விசா வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இந்தியாவிற்குள் நுழைந்த தருணத்தில், அனைவரும் என்னை வாழ்த்தினர், அனைவரின் அன்பையும் பெற்றேன். எனக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. சமீர் கானை மணந்துகொண்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்க விரும்புகிறேன். கடவுளிடம் தாம் வைத்த வேண்டுகோள் நிறைவேறி உள்ளது. திருமண பந்தத்தில் இணையும் தங்களின் கனவு நனவாகி உள்ளது" என்றார்.

ஜாவேரியாவைப் பார்த்த காதலர் சமீர் கான், “அவரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன். அந்த ஆனந்தத்தைத்தான் நீங்கள் என் முகத்தில் தற்போது பார்க்கிறீர்கள். விசா நடைமுறையில் எங்களுக்கு உதவிய இந்திய அரசுக்கும், மக்பூலுக்குக்கும் நன்றி. இரு நாடுகளும் எங்களுக்கு உதவின. காதல் ஒன்றுசேர வேண்டும். நோக்கங்கள் தெளிவாக இருக்கும்போது காதலுக்கு இடையே எந்த எல்லை இடையூறும் வராது என்பதற்கு எங்களது காதல் ஓர் உதாரணம். இரு நாட்டு அரசும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் எங்களுக்கு சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தி உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவிக்துள்ளார்.

எல்லை தாண்டிய காதல் வரிசையில் இணைந்த காதலர்கள்!

இவர்களின் திருமணத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 6ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஜவேரியா கானுவின் விசாவையும் நீட்டிக்க இந்திய அரசுக்கு விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே எல்லை தாண்டிய காதலர்களில் பட்டியலில் இந்திய காதலரை மணக்க வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரும், பாகிஸ்தான் காதலரை மணக்கச் சென்ற இந்திய பெண்ணான அஞ்சு என்பவரும் அடக்கம். இவர், தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே பட்டியலில் இன்னொரு பாகிஸ்தான் பெண்ணுக்கும் இந்திய காதலருக்கும் விசா கிடைக்காத நிலையில், ஆன்லைன் முறையில் திருமணம் நடைபெற்றது. அதுபோல் வங்கதேசம் பெண், இந்திய காதலரை மணக்க வந்து ஏமாற்றத்திற்குள்ளானதும் பேசுபொருளானது. அந்தப் பட்டியலில் இந்தக் காதலர்களும் இணைந்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த காதலர்கள் இருவரும் இந்தியாவில் நேரில் சந்தித்துக்கொள்ளாதபோதும், தாய்லாந்தில் இரண்டு முறையும், துபாயில் ஒரு முறையும் சந்தித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.