இந்தியா

எல்லையில் தொடர்ந்து பதற்றம் - 2 இந்திய வீரர்கள் பலி!

webteam

காஷ்மீர் அருகே இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில், ஜம்முவை சேர்ந்த நாயக் ரஞ்சித் சிங் மற்றும் சதீஷ் பாகத் ஆகிய 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இதனிடையே, அமர்நாத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள், நேற்று காஷ்மீர் மாநிலம் புத்காமில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதுபோன்ற சம்பவங்களால் காஷ்மீரில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஜுன் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானியர்களால் 23 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.