india pakistan ANI
இந்தியா

பாகிஸ்தானின் சித்து வேலை? கடும் கோபத்தில் இந்தியா! மத்திய அரசின் பதிலடி என்ன?

பாகிஸ்தான் செய்ததாக கூறப்படும் ஒரு செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

PT WEB

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை முற்றிலும் தளர்த்த இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, கடும் சேதமடைந்த ‘மர்கஸ் சுபானல்லா’ தளம் 15 மாதங்களில் 110 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தரமான மார்பிள், புதிய பூச்சு, கான்கிரீட் பணிகள் செய்யப்பட்டதோடு, மசூத் அசார், ரவூப் அஸ்கர் ஆகியோர் பாகிஸ்தான் பாதுகாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி, மத்திய அரசின் அடுத்த பதிலடி என்ன என்ற கேள்வி எழுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை பாதுகாப்புத்துறை முன்னெடுத்தது.

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததற்காக எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்த பெயர் வைக்கப்பட்டதாகவும், மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு ராணுவ தளங்கள் அழித்து ஒழிக்கப்பட்டதோடு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகங்கள் துவம்சம் செய்யப்பட்டன.

operation sindoor

இனி அந்த தீவிரவாத அமைப்பு எழுந்திரிக்கவே முடியாது என்று கூறும் அளவிற்கு இந்தியாவின் பதிலடி இருந்தது. ஆனால், இப்படியான சூழலில், அந்த அமைப்புக்கு பாகிஸ்தான் மீண்டும் உதவியிருப்பதாக, அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமதுவின் முதன்மைத் தளமான 'மர்கஸ் சுபானல்லா' வளாகம் கடும் சேதங்களை சந்தித்திருந்தது.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு, அந்த தளம் மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட அந்த தளத்தில், தரமான மார்பிள் தரைகள் பதித்தல், புதிய வர்ணம் பூசுதல், உட்புற பூச்சு வேலைகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குண்டுவெடிப்பால் ஏற்பட்ட ஆழமான பள்ளங்கள் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு நவீனமான முறையில் அந்த கட்டிடம் மேம்படுத்துவதற்காக, 250 மில்லியன் ரூபாயை பாகிஸ்தான் அதிகாரிகள் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

terrorist

அதில் சுமார் 110 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் 15 மாத காலப்பகுதியில் பிரதான வளாகத்தை சீரமைப்பதற்காகவே பிரத்யேகமாக செலவிடப்பட்டுள்ளது என்றும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, இந்த அமைப்பின் மூத்த தலைவர்களான மசூத் அசார், ரவூப் அஸ்கர் ஆகியோர் பாகிஸ்தானின் பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே மத்திய அரசு குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல்கள் அதற்கு வலு சேர்க்கின்றன. பாகிஸ்தான் செய்ததாக கூறப்படும் இந்த செயல், இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசின் எதிர்விணை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.