அபிநந்தனை ஒப்படைக்கும் முன்பு அவரிடம் பாகிஸ்தான் வீடியோ பதிவு செய்ததாகவும், அதனால்தான் அவர் ஒப்படைக்கப்பட காலதாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன், லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்கிருந்து, சாலை மார்க்கமாக காரில் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார். மாலை 4 மணியளவில் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார் அபிநந்தன். ஒப்படைக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் இருநாட்டு அதிகாரிகளின் நடைமுறைகள் பல மணி நேரம் நடைபெற்றது. மாலையே ஒப்படைக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில் இரவு 9 மணிக்கு பிறகே இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது.
இந்நிலையில் ஒப்படைக்கப்படும் முன்பு அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்து, இந்த வீடியோ எடுக்கப்பட்டதாவும் தெரிகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க , தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் எடிட் செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது மட்டுமே இடம் பெற்றுள்ளன என்றும், அந்த வீடியோவே பாகிஸ்தான் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டாகவும் கூறப்படுகிறது.