ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. மறுபுறம், அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாய் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, ஸ்ரீநகரில் விமானங்களை அதிகரிக்கவும், ரத்து கட்டணங்களைத் தள்ளுபடி செய்யவும் விமான நிறுவனங்களை இந்தியாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. உடனடி நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு தலா இரண்டு சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பஹல்காம் தாக்குதல் அச்சம் காரணமாக, தற்போது வரை 25% சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் மெஹ்ரா, “பஹல்காம் தாக்குதல் அச்சம் காரணமாக, தற்போது வரை 25% சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர். பஹல்காமில் பீதி பரவுவதால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகம் உயரும் எனக் கணிக்கப்படுகிறது. மக்கள் இங்கு இருக்கவே பயப்படுகிறார்கள். இதனால், வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீடித்த பொதுமுடக்கம் மற்றும் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு காஷ்மீரில் சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்றது. 2024ஆம் ஆண்டில் மட்டும் ஜம்மு-காஷ்மீருக்கு 2.35 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டு 2.11 கோடியாக இருந்தது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஸ்ரீநகருக்கு விமான முன்பதிவுகள் ஆண்டுதோறும் 50-100% அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதும் இது அதிகரிக்கும் என எதிர்பார்த்த நேரத்தில்தான், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.