ஹிமான்ஷி நர்வால் PTI
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் | அரசுக்கு கோரிக்கை வைத்த பஹல்காமில் கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவி!

”நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ இருக்க வேண்டும்” என பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில், ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலும் பலியானார். தவிர, பயங்கரவாதிகள் அவரைக் கொல்வதற்கு முன் அவரது மதம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. திருமணமான ஆறு நாட்களில் தனது மனைவி ஹிமான்ஷி நர்வாலுடன் தேனிலவுக்காக ஜம்மு காஷ்மீருக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இது, அவருக்குச் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தியது. மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட கணவருக்கு அருகில் அப்படியே சோகத்தில் உறைந்து அமர்ந்திருந்த இவருடைய புகைப்படம், உலகம் முழுவதும் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

இந்த நிலையில், ”நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ இருக்க வேண்டும்” என பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் தெரிவித்துள்ளார். இதகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ''எனது கணவரும் பாதுகாப்புப் படையில் இருந்தார். அப்பாவி மக்களைக் காப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அவர் விரும்பினார். வெறுப்புணர்வும், பயங்கரவாதமும் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு பணியாற்றினார். அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக ’ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இத்துடன் இதனை முடித்துக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுக்கு முன்வைக்கிறேன். நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும்'' என அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து, இன்று அதிகாலை பயங்கரவாதிகளின் 9 முகாம்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 70 பேர் பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயம்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.