இந்தியா

கடந்த ஆண்டு ரயில் மோதிய விபத்தில் 8,733 பேர் உயிரிழப்பு: பலர் புலம்பெயர் தொழிலாளர்கள்

JustinDurai

கடந்த ஆண்டு ரயில் மோதியதில் 8,733 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கடந்த ஆண்டு ரயில் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை ரயில்வே வாரியத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு ரயில்வே வாரியம் பதிலளித்துள்ளது.  அதில், மாநில காவல்துறையிடம் கிடைத்த தகவல்களின்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரயில் மோதி 8,733 பேர் உயிரிழந்துள்ளனர். 805 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

அவர்கள் ஊரடங்கின்போது, ரயில் தண்டவாளம் வழியாக சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். சாலைவழி பயணத்தை விட ரயில்பாதை பயணம் குறைவானது என்று கருதப்படுவதால் அவர்கள் அப்படி சென்றனர். தண்டவாளம் வழியாக சென்றால் போலீசிடம் இருந்து தப்பி விடலாம் என்று கருதினர். மேலும், வழிதவறி செல்ல வாய்ப்பில்லை என்றும், பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்ததால் தண்டவாளத்தில் ரயில்கள் வராது என்றும் அவர்கள் கருதினர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ரயில்கள் தொடா்ந்து ஓடிக் கொண்டிருந்தன. 

கடந்த ஆண்டு ரயில் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை, முந்தைய 4 ஆண்டுகளை விட குறைவுதான் என்றாலும், கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து பெருமளவு குறைக்கப்பட்ட நிலையில் இந்தளவு எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.